Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, December 10, 2023

வெள்ளத்தில் மூழ்கிய நான்கு சக்கர வாகனங்களுக்கு முழு தொகையை காப்பீட்டில் பெறும் வழிகள்

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல கார்கள் முழுமையாக மூழ்கின. ஒரு சில கார்கள் வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்டதையும் காண முடிந்தது.

மழை நீர் வீட்டிற்குள் புகுந்ததால் வெளியே செல்ல முடியாத மக்கள் ஜன்னல் வெளியே தங்களது கார்கள் வெள்ளத்தில் மூழ்குவதையும் அடித்துச் செல்லப்படுவதையும் சோகத்தோடு பார்க்கும் சூழல் உருவானது. தாழ்வான பகுதிகளில் இருந்த வாகனங்கள் இந்த மழையில் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், தங்களது வாகனங்களுக்கான காப்பீட்டை எப்படிப் பெறுவது என்பதில் மக்கள் மத்தியில் நிறைய கேள்விகள் எழுந்துள்ளன.

கார்களுக்கு காப்பீட்டுத் தொகையைப் பெறுவது எப்படி?

கார்களுக்கு காப்பீட்டுத் தொகையை எப்படிப் பெறுவது என்று பிபிசி தமிழிடம் விளக்கினார் ஹுண்டாய் இன்சூரன்ஸ் பிரிவின் அதிகாரி மணிவேல்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "புதிய வாகனம், தேய்மானத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட IDV (Insured Declared Value) என்று உறுதிப்படுத்தப்பட்ட காப்பீட்டு மதிப்பைப் பொறுத்து ஒவ்வொரு காருக்கும் பழுது நீக்கமும், பாகங்கள் மாற்றமும் வேறுபடலாம்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்தால் அதில் நீர் புகுந்துவிடும். உங்களது இன்சூரன்ஸ் பாலிசியில் இஞ்சின் புரொடக்சன் வாய்ப்பைக் கூடுதலாக சேர்த்திருந்தால் மட்டும்தான், அதற்கான காப்பீட்டில் தொகை கோர முடியும். இல்லாவிட்டால் முடியாது," என அவர் தெரிவித்தார்.

மேலும், "கார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதை நீங்கள் அறிந்துவுடன் வாடிக்கையாளர் சேவை மையம் அல்லது காப்பீடு எடுத்த அலுவலகத்துக்கு அழைக்க வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு காப்பீடு நிறுவனமும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அவர்களது அதிகாரப்பூர்வ இணையத்தில் கொடுத்திருப்பார்கள். மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்ற காலங்களில், அதிகப்படியான காப்பீடு கோரல்கள் அவர்களுக்கு வரும் என்பதால் இணைப்பில் காத்திருக்கும் நேரம் அதிகமாக இருக்கலாம்," என்று குறிப்பிட்டார்.

"ஒரு சில காப்பீடு நிறுவனங்கள் நகரில் ஆங்காங்கே முகாம்கள் நடத்தி, வாடிக்கையாளர்களிடம் தகவல்களைப் பெற்று உடனடியாக சர்வேயரை அணுக வழிகாட்டுகின்றனர். வாட்ஸ் ஆப், மின்னஞ்சல் போன்ற தகவல் பரிமாற்றங்களின் மூலமும் சில நிறுவனங்கள் உங்களுக்கு உதவக் காத்திருப்பதாக செய்தி அனுப்பலாம்.

ஒருவேளை உங்களுக்கு அழைப்பில் இணைப்பு கிடைக்க தாமதமாகிறது என்றால் நீங்கள் அவர்களுடைய அதிகாரப்பூர்வமான மின்னஞ்சல் முகவரி மூலம் தொடர்பு கொண்டு காப்பீடு கோரலுக்கான முதற்கட்ட அறிவிப்பான இன்டிமேசனை கொடுக்கலாம்.

காரின் பாதிப்பு குறித்து காப்பீடு நிறுவனத்திற்குத் தெரிவிக்க காருடைய முன்பக்கம், பின் பக்கம், உள் பக்கம் எனப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து மின்னஞ்சலில் இணைத்து தகவல் தெரிவிக்கலாம். இந்தப் புகைப்படமானது காப்பீடு கோரிக்கைக்கு மிகவும் அவசியமானது. அத்துடன் அந்தப் புகைப்படத்தில் உங்களது வாகனத்தின் பதிவெண் தெளிவாகத் தெரியும் படியாக புகைப்படம் எடுத்திருக்க வேண்டும்.

காப்பீடு கோரிக்கையை நிறுவனம் பெற்ற பிறகு, காப்பீட்டிற்கான பதிவு எண் கொடுக்கப்படும். அதையடுத்து காரின் காப்பீடு பற்றிய தகவல்களை அறிய வேண்டுமெனில் அந்தப் பதிவு எண்ணைக் கொண்டு காப்பீடு கோரலின் நிலையைத் தெரிந்துகொள்ளலாம்," என்று மணிவேல் தெரிவித்தார்.

காரின் பாதிப்பு எப்படி மதிப்பிடப்படும்?

காப்பீட்டு நிறுவனம் காரை பழுது பார்க்கும் நிலையத்திற்கு டோ செய்து எடுத்துச் செல்வதற்காக வாகனம் ஏற்பாடு செய்து தரக்கூடும் என்று விளக்கினார் காப்பீடு அதிகாரியான மணிவேல்.

"அதற்கு டோ செய்து வாகனத்தை மீட்பதையும் காப்பீடு போடும்போது சேர்த்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், அதற்கான பணமும் காப்பீட்டில் சேர்ந்தே கிடைக்கும்.

ஆகவே, காப்பீட்டிற்கான ப்ரீமியத்தில் அதற்கான பணத்தையும் செலுத்தி இருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது.

காப்பீடு கோரும்போது, அதற்கான படிவத்தை நிரப்பி, அதனுடன் வாகன ஓட்டுநர் உரிமம், காப்பீடு சான்றிதழ், பர்மிட் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் இணைத்து நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும். சமர்ப்பித்த ஆவணங்களின் அசலையும் காட்ட வேண்டியிருக்கும் என்பதால் அவற்றையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.

மேற்சொன்ன ஆவணங்கள் தொலைந்திருந்தால் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து சி.எஸ்.ஆர். பெற்று ஆவணம் பெற முயலலாம்," என்று தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காரை மதிப்பீடு செய்ய சர்வேயர் என்ற காப்பீடு அதிகாரி ஒருவரை நிறுவனம் அனுப்பும். அவர் உங்கள் வாகனம் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பிடுவார்.

வாகனத்தின் பாதிப்பு எப்படிப்பட்டது, எந்தெந்த பாகங்களை மாற்ற வேண்டும், பழுது நீக்க வேண்டும், அதற்கு எவ்வளவு செலவாகும் என்பவற்றை சர்வேயர் முடிவு செய்வார்.

அவரது மதிப்பீடு முடிந்த பிறகு, காப்பீடு கோரலின் நிலை பற்றிய விவரங்கள் அவ்வப்போது குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். அல்லது ஏற்கெனவே குறிப்பிட்டபடி மின்னஞ்சல் மூலமாகவோ கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலமாகவோ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு காப்பீடு கோரலின் நிலையை அறிந்து கொள்ளலாம்.

கார் இன்ஜினை ஸ்டார்ட் செய்வது குறித்து காப்பீட்டு நிறுவனங்கள் கூறுவது என்ன?

ஏற்கெனவே காப்பீட்டை எடுக்கும்போது ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட நிபந்தனைகளின்படி எந்தெந்த பாகங்களுக்கான காப்பீட்டுத் தொகை அந்த நிறுவனத்தால் வழங்கப்படும் என்பதை அவர் மீண்டும் உங்களுக்கு அறிவுறுத்துவார்.

அதுபோக காப்பீட்டில் வராத பாகங்களைச் சீர் செய்ய வேண்டியிருந்தால் அதை சரி செய்வதற்கு எவ்வளவு ஆகும் என்ற முன் கணிப்பையும் அவர் உங்களுக்கு ஒரு பட்டியலாகத் தருவார். இதற்கு நீங்கள் ஒப்புக்கொண்ட பின் உங்களுடைய கார் ரிப்பேர் செய்வதற்கான பணிகள் தொடங்கும்.

ஒருவேளை உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்கள் பணத்தில் ரிப்பேர் செய்யக்கூடிய பாகங்களை அவசியம் இருந்தால் மட்டுமே நீங்கள் மாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். காரின் பாதுகாப்பான இயக்கத்தைப் பாதிக்காத, காப்பீட்டில் வராத பிற உதிரி பாகங்களை பின்னர்கூட மாற்றிக் கொள்ளலாம்.

பழுது பார்க்கும் பணிகள் முடிந்த பின்பு இன்சூரன்ஸ் நிறுவனம் பழுது நீக்க மையத்துக்கு பணத்தைக் கொடுத்து விடும். ஒருவேளை நீங்கள் வெள்ளத்தில் சிக்கிய காரை தவறுதலாக இன்ஜின் ஸ்டார்ட் செய்து அது ஹைட்ரோ லாக் ஆகி இருந்தால் உங்கள் கார் ரிப்பேர் செய்ய முடியாத ஒன்றாக மாறிவிடும்.

அப்படி ஆகியிருந்தால், காரின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டும், உறுதி செய்யப்பட்ட காப்பீடு மதிப்பு என்ற IDV மதிப்பைப் பொருத்தும் கார் ஸ்கிராப் என்னும் மறுசுழற்சிக்கோ, உடைத்துப் போட்டு உதிரி பாகங்கள் பிரிக்கும் பணிக்கோ அனுப்பப்படலாம்.

இதையடுத்து உங்களுக்கு எவ்வளவு தொகை வழங்கப்படும் என்பதை காப்பீடு நிறுவனம் தகவல் தெரிவிக்கும். இறுதியாக உங்கள் இரு தரப்பால் ஒப்புக்கொண்ட மதிப்பீட்டுக்கான பணம் உங்களுக்கு காப்பீடு நிறுவனத்தால் கொடுக்கப்படும்.

ஒருவேளை உங்களது வாகனமானது கடனிலோ அல்லது ஒப்பந்தத்திலோ இருந்தால் அதற்கான பணம் உரியவயருக்குச் செல்லும். வாகனம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்தால், நீங்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகாரளித்து முதல் தகவல் அறிக்கை பெற வேண்டும்.

குறிப்பிட்ட மாதங்கள் வரை அந்த வாகனம் கண்டுபிடிக்க முடியாது இருந்தால், காணாமல் போய்விட்டதாகவும், கண்டறிய முடியாத வாகனம் என்றும் காவல்துறை ஒரு சான்று அளிக்கும். அசல் சாவியைக் கொடுத்து, ஆர்டிஓ தகவல் கொடுத்த அத்தாட்சி ஆவணம், இன்ன பிற ஆவணங்களைக் கொடுக்க வேண்டி வரும்.

அவை சரியாக இருந்தால், திருடுபோன காருக்கான IDV மதிப்பைப் பொறுத்து உங்களுக்கு காப்பீடு நிறுவனம் பணம் கொடுக்கலாம். பாதிப்பின் அளவு மற்றும் கார் தயாரித்த வருடத்தைப் பொறுத்து இழப்பீடு கணிக்கிடப்படும்.

காப்பீட்டின் வகைகள் என்னென்ன?நில் டெப்ரிசியேசன் எனப்படுவது எதிர்பாராத விதமாக நடக்கக்கூடிய சாலை விபத்துக்கு 100 சதவீதம் காப்பீடு செய்துகொள்வது. இதை பம்பர் டூ பம்பர் எனக் கூறுவார்கள்.
ஓன் டேமேஜ் எனப்படுவது, நாமே வாகனத்தை இயக்கும்போது குழியில் விட்டுவிடுவது, கல்லில் மோதிவிடுவது ஆகியவற்றைக் குறிக்கும்.
மூன்றாம் நபர் காப்பீடு என்பது நமது வாகனத்தால் தவறுதலாக யார் மீதேனும் மோதினால் அவர்களுக்கான மருத்துவச் செலவையும், உயிரிழப்பு இழப்பீடும் பெறுவது. பெரும்பாலும் புதியதாக வாகனம் வாங்கிப் பதிவு செய்யும்போதே 3 ஆண்டுகளுக்கு மூன்றாம் நபர் காப்பீட்டுக்கான பணத்தை விற்பனை நிறுவனங்களே பெற்று காப்பீடு வாங்கித் தந்துவிடும்.
நட்டு, போல்டு, வயர், எலியால் சேதமான வயர் பாகங்கள் போன்றவற்றுக்கான கன்ஸ்யூமபிள்ஸ் என்ற காப்பீட்டைக் கூடுதலாக போட்டிருந்தால் மட்டுமே காப்பீட்டுத் தொகை கிடைக்கும். இஞ்சின் புரொடக்சன் என்பது, இஞ்சினுக்குள் தண்ணீர் புகுந்திருந்தால் 100 சதவீதம் காப்பீடு செய்து கொள்ளலாம்.
ஆ.டி.ஐ என்ற காப்பீடானது ரிட்டன் டு இன்வாய்ஸ் எனப்படும். இது, கார் தொலைந்து போனாலோ, எரிந்து போனாலோ புதியதாக கார் வாங்கியபோது செலுத்திய எக்ஸ் ஷோரூம் விலையை (சாலை வரி உள்பட) திரும்பக் கிடைத்துவிடும்.
கீ புரொடக்சன் என்பது, சாவி தொலைந்துவிட்டால், சிஎஸ்ஆர் என்ற காவல்நிலைய புகார் நகல் கொடுத்த பின்பு, கிடைக்கும் காப்பீடு.
பர்சனல் பிலாங்கிங் காப்பீடானது விபத்தின்போதோ, திருட்டின் போதோ காருக்குள் வைத்திருந்த பொருட்கள் திருடுபோயிருந்தால், அதற்கான பணமும் கிடைக்கும்.
வெள்ளத்தில் பாதித்த வாகனங்களைப் பொறுத்தவரை, உங்களுடைய காப்பீட்டின் IDV மதிப்புக்கும் மேல் செலவாகும் எனத் தெரிந்துவிட்டால், அந்த வாகனத்தை காப்பீடு நிறுவனம் டோடல் லாஸ் எனக் கூறிவிடலாம்.

ஸ்கிரேப் செய்த கார்கள் என்னவாகும்?

ஸ்கிரேப் செய்யப்பட்ட கார்கள் பழைய இரும்புக் கடைக்கு உடைத்து அனுப்பப்பட வாய்ப்புள்ளதாகவும் ஸ்க்ரேப்புக்கான கார்கள் உதிரிபாக சந்தையில் விலைக்கு எடுத்துக் கொள்ளப்படக்கூடும் என்றும் கூறுகிறார் காப்பீடு அதிகாரி மணிவேல்.

"இல்லையெனில் நீங்களே அதைத் திரும்ப எடுத்துக் கொண்டு வெளி கடைகளில் உதிரிபாகம் பெற்று தனியார் பழுது நீக்க மையத்தில் சீரமைத்துக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறது.

பழைய கார்கள் விற்பனை மையத்திலும் இந்த பாகங்கள் ரெட் பையர்ஸ் மூலம் வாங்கப்பட்டு, ஏலம் மூலம் எடுத்து பிற கார்களில் தேவைப்படும் பாகங்களைப் பிரித்து எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது," என அவர் கூறினார்.

வெள்ள பாதிப்பு கார் மதிப்பீட்டின் வகைகள்

பொதுவாக வெள்ளத்தில் பாதித்த கார்களை நான்கு வகைகளாகப் பிரிப்பார்கள் எனக் கூறினார் வாகனக் காப்பீட்டுத் துறையில் 10 ஆண்டுகளாகப் பணியாற்றும் ராஜேஷ்.

இதுகுறித்து விளக்கிய ராஜேஷ், வெள்ளம் பாதித்த கார்களை ABCD என பிரிப்பார்கள், என்றார்.A பிரிவில் சேர்க்கப்பட்ட கார்கள், முழுவதுமாக நீரில் மூழ்கியிருக்கும்.
B பிரிவில் சேர்க்கப்பட்ட கார்கள் இருக்கைக்கு மேல் வரை தண்ணீர் தேங்கியவையாக இருக்கும்.
C ரக கார்கள் இருக்கை தொடங்கும் இடம் வரை தண்ணீர் தேங்கியிருக்கலாம்.
D ரக கார்கள் காரின் மேட் என்ற விரிப்பு வரை மட்டும் தண்ணீர் தேங்கியவையாக இருக்கும்.

இதில் பொதுவாக A மற்றும் B ரகத்தினல் உள்ளவற்றில் இஞ்சினுக்குள் தண்ணீர் சென்றிருந்தால் அது டோடல் லாஸ் எனக் கணக்கிடப்படும்," என்றார். அத்துடன் ஆ.டி.ஐ இன்சூரன்ஸ் எடுப்பதன் அவசியத்தையும் ராஜேஷ் வலியுறுத்தினார்.

"என்னுடைய நண்பர் வாங்கிய விலையுயர்ந்த பி.எம்.டபுள்யூ சொகுசு கார் ஓராண்டில் வெள்ளத்தில் சிக்கி முழுமையாக மூழ்கியது. அவர் ஆர்டிஐ காப்பீட்டைக் கூடுதலாகத் தேர்வு செய்திருந்ததால் அவருக்கு புதிய காரையே வழங்க நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

சில நிறுவனங்கள் இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கான பணத்தையும், நடப்பு ஆண்டுக்கான எக்ஸ் ஷோரூம் விலையையும் சேர்த்தே திருப்பித் தருகின்றன. சாதாரண கார்களுக்கு ஆர்டிஐ வாய்ப்பைத் தேர்வு செய்ய வழக்கமான பிரீமியத்தைவிட கூடுதலாக 5,000 முதல் 8,000 ரூபாய்வரை ஆகலாம்.

ஆனால், இதுபோன்ற சமயங்களில் அது மிகவும் பலனாக உள்ளது. ஆர்டிஐ வாய்ப்பைத் தேர்ந்தெடுக்க 3 ஆண்டுகள்கூட அவகாசம் உள்ளது. ஏற்கெனவே குறைந்த IDV மதிப்பு கொண்ட காப்பீட்டை எடுத்த நபர், அதை அதிகரிக்க விரும்பினாலோ, கூடுதலாக இஞ்சின் புரொடக்சன், ஆர்டிஐ சேர்க்க விரும்பினாலோ, காரை ஆய்வு செய்த பின் காப்பீட்டு நிறுவனம் அந்த வாய்ப்பை வழங்கும்," என்றும் ராஜேஷ் தெளிவுபடுத்தினார்.

No comments:

Post a Comment