Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, November 28, 2023

இன்ஜினியரிங் படிப்பில் பெரிய மாற்றம்

தலைசிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கு அதிக மாணவர்களைக் கொண்டு வரக்கூடிய நடவடிக்கையாக, 2024-25 முதல் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்களின் உச்சவரம்பை நீக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் ( AICTE) பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் தற்போது, ஒரு பொறியியல் கல்லூரியில் ஒரு பாடப்பிரிவில் அதிகபட்சமாக 240 மாணவர்களை மட்டுமே சேர்க்க முடியும். இந்தநிலையில் இந்த உச்ச வரம்பை நீக்க அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது.

“தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 மற்றும் மொத்த சேர்க்கை விகிதத்தை மேம்படுத்துவதற்கான தேசத்தின் முன்முயற்சியின்படி, தற்போதுள்ள கல்வி நிறுவனங்கள் வழங்கும் கல்லூரிகள்/ படிப்புகளுக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பை நீக்க கவுன்சில் முன்மொழிகிறது,” என்று AICTE தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும் என்று கவுன்சில் குறிப்பிட்டுள்ளது. உச்ச வரம்பை அதிகரிப்புக்கு அனுமதி வழங்குவதற்கு முன் நிபுணர் குழுக்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும்.ஒரு கல்வி நிறுவனம் ஏற்கனவே முக்கிய பாடப்பிரிவுகளில் (Core Branches) குறைந்தது மூன்று படிப்புகளை வழங்கினால் மட்டுமே இடங்கள் அதிகரிக்க அனுமதிக்கப்படும் என்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தெரிவித்துள்ளது.

சிறந்த பொறியியல் கல்லூரிகள் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளன. தரமான கல்வியை வழங்கும் கல்லூரிகள் இந்த நடவடிக்கையின் மூலம் தங்கள் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், வளாகங்களை விரிவுபடுத்தவும் முடியும். கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் இது உதவும் என்று அந்த கல்லூரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் சராசரி மாணவர் எண்ணிக்கை 30,000 முதல் 40,000 வரை இருப்பதாகவும், அதே சமயம் இந்தியாவில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இந்த நடவடிக்கை, தரமான கல்வியை வழங்கும் இடைநிலைக் கல்லூரிகளில் சேர்க்கையை பாதிக்கும் என்று சிலர் கவலைப்படுகின்றனர். முன்மொழியப்பட்ட நடவடிக்கை உயர்நிலைக் கல்லூரிகளுக்கும் இடைநிலைக் கல்லூரிகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. சேர்க்கை குறைந்தால் அவர்களால் தரமான கல்வியை வழங்க முடியாது, சில நிறுவனங்கள் கூறுகின்றன.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் கூறுகையில், இந்த நடவடிக்கை இரண்டாம் நிலை பொறியியல் கல்லூரிகளை மூடுவதற்கு வழிவகுக்கும். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் 440 பொறியியல் கல்லூரிகளில் 2.6 லட்சம் இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

இந்த பரிந்துரை, கம்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் ஆகிய என்ஜினீயரிங் துறை படிப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க, மற்ற பாடங்களில் மாணவர் சேர்க்கை குறையும் வாய்ப்பை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment